
Pathivu | Tamil Win | IBC Tamil | Vakeesam | MaatraM | Tamil Diplomat | PonguThamiL | SamaKalam
சிம்பாவே நாட்டின் ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றிய பின்னர் முதன்முறையாக பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இன்று ராபர்ட் முகாபே பங்கேற்றார்.
ஆபிரிக்காவில் உள்ள சிம்பாவே நாட்டின் ஜனாதிபதி ராபர்ட் முகாபே கடந்த 37 ஆண்டுகளாக இந்த பதவியில் நீடித்து வந்தார். இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் நேற்று முன்தினம் சிம்பாவேயில் திடீரென இராணுவப் புரட்சி ஏற்பட்டது.
தலைநகர் ஹராரேயில் களம் இறங்கிய இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதாக அறிவித்தது. ஜனாதிபதி; ராபர்ட் முகாபே கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே முகாபேவுக்கும் இராணுவத்துக்கும் இடையே சமரச பேச்சு வார்த்தையில் மூத்த கிறிஸ்தவ தேவாலய தலைவர்கள் அண்டை நாடான தென் ஆபிரிக்காவின் தூதர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிகாரம் பறிக்கப்பட்ட சிம்பாவே ஜனாதிபதி ராபர்ட் முகாபே விரைவில் நாடு கடத்தப்படுவார். அவரது மனைவி மற்றும் ஊழல் செய்த முக்கிய அமைச்சர்கள் உயரதிகாரிகள் கைதாவார்கள் என தெரியவந்துள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை வெற்றிகரமான பாதையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக இராணுவ வட்டாரங்களை சுட்டிக்காட்டி சிம்பாவே அரசுக்கு சொந்தமான ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு பின்னர் முதன்முறையாக பொது நிகழ்ச்சியில் இன்று ராபர்ட் முகாபே பங்கேற்றார்.
ஹராரே நகரின் புறநகர் பகுதியில் இன்று நடைபெற்ற சிம்பாவே திறந்தநிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பட்டமளிப்பு விழாவுக்கான சீருடையுடன் கலந்துகொண்ட ராபர்ட் முகாபே, விழா மேடையில் இசைக்கப்பட்ட சிம்பாவே நாட்டுப் பண்ணுக்கு மரியாதை செலுத்திய பின்னர், பட்டமளிப்பு விழா தொடங்குவதாக அறிவித்தபோது, அரங்கில் கூடி இருந்தவர்கள் கரவொலி எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.